Tuesday, July 16, 2013

அடிமை விலங்குகள்!

சென்னையில் அங்காடித் தெருவில் உள்ள அந்த பிரபலமான கடைக்கு போகாதவர்களே இருக்க முடியாது. நாளுக்கு நாள் அங்கே கூட்டம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அங்கே கிடைக்காத பொருள் இல்லை. அதை வாங்கிக்குவிக்காத தமிழனும் இல்லை.  நானும் இதற்கு எந்த விதத்திலும் விதிவிலக்கல்ல.

எப்போது சென்னை வந்தாலும் அங்கே சென்று பொருட்கள் வாங்கி தில்லிக்கு கொண்டுவருவது வழக்கம். தில்லியை விட முன்பு பொருட்கள் மலிவாக இருக்கும். இது முன்பு. இப்போது அப்படி இல்லை.

முன்பு 10 சதவீத லாபம் மட்டுமே வைத்தார்கள். ரூ50க்கு பொருளை வழங்கும் விற்பனையாளர் ரூ55க்கு ஸ்டிக்கர் ஒட்டி, கடையில் அடுக்கிவிட்டு செல்ல வேண்டும். அந்த அளவு 10 சதவீத லாபம் என்பது முன்பிருந்தது. இப்போத 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை லாபம் வைக்கிறார்கள். தில்லியில் உள்ள பொருட்களின் விலையை ஒப்பிட்டே நான் இதை ஆணித்தரமாக சொல்ல முடியும்.

இந்த விலையிலும் அவர்கள் மற்றவர்களை விட மலிவாக வழங்கமுடிகிறது என்றால், மற்றவர்கள் அடிக்கும் கொள்ளையை என்ன சொல்ல?

நான் இங்கே சொல்ல வந்த விஷயம் அது அல்ல.

சில ஆண்டுகளுக்கு முன்னால் அந்த கடையில் வழக்கமாக கடை ஊழியர்கள் அணியும் சீருடையுடன் வேறு நிற வண்ணத்தில் சீருடை அணிந்தவர்களைக் கண்டேன். என்னவென்று விசாரித்த போது, எடுபிடி வேலைக்காக மேற்கு வங்கம், ஒடிசா போன்ற பகுதியில் இருந்து ஆட்களை அமர்த்தியிருப்பதாக சொன்னார்கள்.

பின்னர் கடந்த வருடம் ஜட்டி பனியன் விற்பனையிலும் வட இந்திய இளைஞர்களைக்கண்டேன். அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. பொருட்களை எடுத்துக்காட்டுவதிலும் ஆர்வம் காட்டவில்லை. வாங்கி வந்த பொருட்களை வீட்டில் வந்து பார்த்தால் வேறு அளவுடனாக இருந்தது.
இந்த முறை நானும் என் மனைவியும் வீட்டுப்பொருட்களை அங்கே அள்ளினோம். இரவு 9.45 மணி ஆகிவிட்டது. கடை அடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றின.

அந்த தெருவிற்குள் இரவு 9.30 மணிக்கு மேல் தான் பொருட்கள் ஏற்றிவரும் டெம்போக்கள் வர அனுமதி உண்டு. வெளியே பார்த்தேன். வண்டிகள் வரிசையாக நின்றன. வாடிக்கையாளர்களை மெல்ல அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.


எனக்கு நிறைய பொருட்கள் என்பதால் அதனை தேடிப்பிடித்து சரிபார்த்து த் தர நேரம் பிடித்தது. காத்திருந்த நேரத்தில் தான் அந்த காட்சியைக் காண நேர்ந்தது.

கடை வாசலில் காத்திருந்த வண்டிகளில் முதல் இரண்டு வண்டிகளில் இருந்து சாமான்களை எடுக்க முனைப்பான முயற்சி நடைபெற்றது. அப்போது எங்கிருந்து தான் வந்தார்களோ (வந்ததோ என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும்). ஆட்டு மந்தை போல் ஒருவர் பின் ஒருவராக, அந்த வித்தியாசமான, நான் முன்பே சொன்ன அந்த வித்தியாசமான வண்ணம் கொண்ட சீருடையணிந்தவர்கள் வந்தார்கள்.

ஒருவர் மற்றவரிடம் பேசவில்லை. தன் தாய்மொழியில் கூட பேசவில்லை. முகத்தில் எவ்வித சலனமும் இன்றி, டெம்போவில் இருந்து இறக்கி விடப்பட்ட கனமான பாத்திர மூட்டைகளை முதுகில் தாங்கி வந்து கடையின் முன் பகுதியில் இறக்கினார்கள். பின் அதே வரிசையில் சென்று மீண்டும் வண்டிக்கு அருகில் சென்று அங்கும் வரிசையில் நின்று சாமான்களை முதுகில் சுமந்து வந்தார்கள்.

சில நிமிடங்களில் இரண்டு வண்டி சாமான்கள் இறக்கப்பட்டதும், அவை புறப்பட்டன, அடுத்த இரண்டு வண்டிகள் வந்தன. முதல் இரண்டு வண்டியில் வந்த சாமான்களின் சொந்தக்காரர்கள், கடை ஊழியர்களுடன் சேர்ந்து அவற்றை எடை போட்டு சரிபார்த்தனர்.

அதற்குள் இந்த சுமைதூக்கிகள் அடுத்த வண்டியில் இருந்து சாமான்களை  இறக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒருவன் சுமையை தவறவிட்டான், காலில் போட்டுக்கொண்டான். அதற்கு அவனிடம் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. மற்ற ஊழியர்கள் தான் அவனை காட்டுத்தனமாக ஏசினார்கள். காட்டுத்தனமாக என்றால், தமிழ் மற்றும் அவர்களுக்கு தெரிந்த இந்தியில் ஏசினார்கள். அதற்கு சாமானை தவறவிட்டவனிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை. அவன் பின்னால் இருந்தவர்களிடம் இருந்தும் மூச்சு பேச்சில்லை.

அந்த வலியிலும் அவன் கூன்விழுந்தவன் போல் சுமையை முதுகில் சுமந்து கொண்டு வந்து இறக்கினான். சுமார் 15 நிமிடங்கள் இந்த காட்சியை பார்த்ததும் எனக்கு இவர்கள் எப்படி பேசாமல் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் வந்தது. சற்று ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் வங்காளதேசத்தில் இருந்து பிழைக்க வந்தவர்களாக இருக்கவேண்டும் என்று எண்ணத் தொடங்கினேன். அதற்கு வாய்ப்பிருக்கிறது. அதிகம் வாய் திறக்காமல் எந்த வட இந்தியனாலும் இருக்க முடியாது. இப்படி, வாய் மூடி மவுனியாக, கூனிக்குறுகி, அடிமையைப் போல் இங்கே வந்து வேலை செய்கிறார்கள் என்றால் அவர்கள் வங்காள தேசத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கும். வங்காள தேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பை கொல்கத்தா போன்ற இடத்தில் அவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். இப்போது அவர்கள் தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டார்கள்.

சொன்னவேலையை, ரோபோ போன்று, எவ்வித எதிர்ப்பும் காட்டாமல், அடிமையாக அடிமையிலும் அடிமையாக செய்துவருகிறார்கள். 15 வயது முதல் 60 வயது வரையிலானவர்களை பார்க்கலாம்.


கடைக்காரர் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார், ஒரு வேளை அவர்கள் வயிறார சாப்பிடுகிறார்களாக இருக்கும். ஆனால் அவர்கள் இந்த வேலையை செய்யாவிட்டால், அந்த வேலையை செய்ய தமிழர்கள் கிடைப்பதில்லை.

இங்கே தமிழர்களுக்குத்தான் இலவச அரிசி, அம்மா உணவகம் இருக்கிறதே?. அவர்கள் ஏன் இது போன்ற வேலைக்கு வருகிறார்கள்?.

இன்று சென்னையின் எந்த மூலையைப்பார்த்தாலும், எந்த கடையைப்பார்த்தாலும் வட இந்தியர்கள் தான் இருக்கிறார்கள். அவர்கள் உண்மையில் வட இந்தியர்கள் தானா இல்லை வங்காள தேசத்தை சேர்ந்தவர்களா தெரியவில்லை. அவர்கள் இல்லாமல் வீடு கட்ட முடியாது, டெம்போ போன்ற வண்டி ஓட்ட முடியாது. ஒவ்வொரு சலூனிலும் அவர்களைக் காணலாம்.

ஓசி சோறு சாப்பிட்டு நாம் சோம்பேறியாகிக்கொண்டிருக்கிறோம். ஒரு நாள் நாம் இவர்களைப்போல் அடிமைகளாக எங்காவது போய் வேலை செய்ய வேண்டிய நேரம் வரலாம்.

5 comments:

Anonymous said...

ஒரு நாள் நாம் இவர்களைப்போல் அடிமைகளாக எங்காவது போய் வேலை செய்ய வேண்டிய நேரம் வரலாம்./////////

நிச்சயம். ஆனால் ஒரு மாற்றம். அடிமை விலங்குகளாக தெரிகிற இவர்கள் நாளை எஜமானன் ஆவார்கள். இவர்களிடம் நாம் கூலிகளாவோம். அது தான் நடக்க போகிறது. எப்போதுமே முதல் தலைமுறை உழைப்பாளிகளே, அடுத்த தலைமுறையில் பணக்காரர்களாக, முதலாளிகளாக மிளிர்வார்கள். அண்ணாச்சிகளே உதாரணம். சுய நலத்திற்காக முதலாளிகள், வடநாட்டவரை அழைத்து வந்ததன் பலனை தமிழ் சமூகம் விரைவிலேயே அனுபவிக்க போகிறது.

கூடல் பாலா said...

ஆம்....தமிழகத்தில் கிராமங்கள் மற்றும் நகரங்கள் அனைத்து இடங்களிலுமே கடினமான வேலை செய்பவர்கள் குறைந்துவிட்டார்கள் .... இப்படியே போனால் அடிமையாகவேண்டியதிருக்கும்....

கூடல் பாலா said...

Word Verification ஐ நீக்கிவிட்டால் கருத்திடுவது எளிதாக இருக்கும்...

amaran said...

நான் மதுராந்தகம் அருகில் எனது கொடூர் கிராமத்திலுள்ள வீட்டுக்கு சென்றிருந்தேன்.அங்கும் எடுபிடி வேலைக்கு கிராமத்தில் உள்ள வேலைகாரர்கள் கிடைக்கவில்லை, இந்திக் காரங்கள் என்று வெள்ளையா எவனோ ஒருத்தன் வேலை செய்தான்.. கூலியும் நம்ம ஆட்களை விடவும் மிகவும் குறைவு...நீங்கள் சொல்வதை போல் நகரத்தில் மாத்திரம் அல்ல கிராமங்களிலும் நுழைந்து விட்டார்கள் அவர்கள்.

கோவை நேரம் said...

வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் நுழைந்து விட்டிருக்கின்றனர்.குறைந்த கூலி, நிறைய வேலை என இருப்பதால்..

Post a Comment