Tuesday, July 31, 2012

கனவுகளோடு கருகியவர்கள்

கடந்த இரண்டு நாளாக மனதை பிசைந்து கொண்டே இருக்கிறது.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்11ம் பெட்டி நள்ளிரவில் தீப்பிடித்து 32 உடல் கருகி உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி தான்.

எவ்வளவோ முறை இது போன்ற ரெயில் விபத்து செய்தியை கேட்டும் படித்தும் பார்த்தபோது இந்த அளவு மனம் வலிக்கவில்லை. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த விபத்து என்றதும் மனம் வலிக்கிறது.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் நான் விரும்பி பயணிக்கும் ரெயில். ஆடி மாதம் ஊருக்கு வரும்போது விரும்பி ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட் எடுத்து, வழியெங்கும் மழையை அனுபவித்தபடி பயணம் செய்வேன். உடன் பயணிக்கும் பயணியுடன் அரசியல் இலக்கியம் என உலகில் ஒரு தலைப்பையும் விடாமல் என்  மேதாவித்தனத்தைக் காட்டி அவர்களை வாய்பிளக்கச்செய்து பயணிப்பேன். நன்றாக உறங்குவேன்.  கடந்த 14 வருட தில்லி வாழ்க்கையில் குறைந்தது 10 முறையாவது ஆடி மாதம் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன். கடந்த ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் இந்த பயணத்தை மேற்கொண்டேன். அடுத்த வாரம் மீண்டும் பயணிக்க உள்ளேன்.

இந்த முறை நான் அதே மகிழ்ச்சியுடன் பயணிப்பேனா என்று தெரியவில்லை. குழந்தைகுட்டி என்று குடும்பஸ்தனாகிவிட்டது தான் காரணமா தெரியவில்லை. உயிரழந்த அப்பாவிப்பயணிகளையே மனது சுற்றி சுற்றி வருகிறது.
 தப்பித்து செல்ல வழியில்லாமல் கரிக்கட்டைகளாக கருகிக்கிடக்கிறார்கள். 
நண்பர் முரசு ரமேஷ் எடுத்த படம்.  

நாளை காலை ஊரிலிருக்கும் குழந்தைகளை பார்க்கப்போகிறோம் என்ற கனவிலும், அப்பா அம்மாவை பார்க்கப்போகிறோம், சொந்த ஊருக்கு போகிறோம், வேலையில் சேரப்போகிறோம் என்ற கனவில், ரெயிலில் பயணிக்கும் சுமார் 1700 பயணிகளும் கனவோடு தான் இரண்டாம் நாள் இரவில் படுக்கப்போவார்கள். நானும் அப்படித்தான் போவேன். அப்படிப்பட்ட 72 பயணிகளின் தூக்கத்தை கலைத்து, கனவை திருடி தீயிட்டுப்பொசுக்கிவிட்டது இந்த விபத்து. கரிக்கட்டைகளாக அடையாளம் தெரியாத அளவு எரிந்து போயிருக்கிறார்கள். தப்பித்துப்போக வழியில்லாமல் எப்படிக் கதறியிருப்பார்கள். அணு உலையால் ஆபத்து என்று குரல் கொடுக்கிறார்களே, எதிர்பாராத இந்த விபத்தில் உயிரிழப்பை தடுக்க வழி என்ன என்று ஆராய இதுவரை யாருமே முயற்சிக்காதது ஏன்?.

செய்தி பற்றி தனியார் தொலைக்காட்சிகள் பல்வேறு கோணத்தில் விவாதித்து தங்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

குளுமை செய்யப்பட்ட பெட்டிகளில் புகை கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்குமாம், ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் டிவியில் சொல்லிக்கொண்டிருந்தார். குளுமை வசதி செய்த பெட்டியில் பயணிப்பவர்கள் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள். கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே. அவர்கள் உயிரைக்காக்கத்தான் ஏற்பாடு.

செல்போன் சார்ஜ் செய்யும் வசதி கூட அவர்களுக்கு ஒவ்வொரு படுக்கைக்கும் அருகில் இருக்கும். ஸ்லீப்பர் வசதி பெட்டிகளில் கழிவறை பக்கத்தில் இருக்கும். ரெயில்வே நிர்வாகம் அவர்களை மதிக்கும் விதம் அவ்வளவு தான்.

விபத்து நடந்து 12 மணி நேரம் வரை ரெயில் மந்திரியால் விபத்து நடந்த இடத்திற்கு வர முடியவில்லை.

அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரத்தை மாலை வரை கண்டுபிடிக்க முடியவில்லைவயாம்.

எது எப்படி இருந்தாலும், காலையில் அப்பா வந்துவிடுவார் என்ற கனவுடன் உறங்கச்சென்ற குழந்தைக்கும், கணவர் வந்துவிடுவார் என்ற நினைப்புடன் உறங்க சென்ற மனைவிக்கும், தன் மகன் வந்துவிடுவான் என்ற ஆசையுடன்இருக்கும் பெற்றோருக்கும் பேரிடியாகத்தான் இந்த செய்தி இருந்திருக்கும்.

நானும் இந்த காலகட்டத்தில் இதே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருபவன் தானே என்பதை அறிந்திருந்த நண்பர்கள் போன் செய்து உறுதி செய்து கொண்டார்கள்.

இனி நான் அந்த தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் எப்படி பயணிப்பேன் என்ன நம்பிக்கையுடன் இரவு உறங்கச்செல்வேன்?

உயிரிழந்த பயணிகள் அனைவரது ஆன்மாவும் சாந்தியடையவேண்டும். நாடெங்கும் உங்கள் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உங்கள் மரணத்தின் காரணமாக ரெயில் பயணத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தால் உங்கள் மரணத்தால் கிடைத்த பலனாக நாங்கள் கருத வேண்டுமா?

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வேதனை தரும் சம்பவம்....

mani said...

The Railway department never respect it's passenger. i do agree with Mr.Chindambaram

Gopikrishnan Bala said...

"நாளை காலை ஊரிலிருக்கும் குழந்தைகளை பார்க்கப்போகிறோம் என்ற கனவிலும், அப்பா அம்மாவை பார்க்கப்போகிறோம், சொந்த ஊருக்கு போகிறோம், வேலையில் சேரப்போகிறோம் என்ற கனவில், ரெயிலில் பயணிக்கும் சுமார் 1700 பயணிகளும் கனவோடு தான் இரண்டாம் நாள் இரவில் படுக்கப்போவார்கள். நானும் அப்படித்தான் போவேன். அப்படிப்பட்ட 72 பயணிகளின் தூக்கத்தை கலைத்து, கனவை திருடி தீயிட்டுப்பொசுக்கிவிட்டது இந்த விபத்து".

RAJA said...

chennai thandil rules ellam kidayathu. appavigal eppavume thamizhan than. reserve seidha petiyil unreserved payanigalum eriynal, enna vidhathil safety aga irukka mudiyum.

Post a Comment