Saturday, March 10, 2018

அது ஒரு கனாக்காலம்!

அது ஒரு கனாக்காலம்!!!
======================================================
சென்னையில் எங்கள் வாழ்க்கை மந்தைவெளியில் தொடங்கியது. முதலில் நார்ட்டன் சாலையிலும் பின்னர் ராமகிருஷ்ணா மடம் சாலையிலும் சுமார் 40 வருடங்கள் வாழ்ந்தோம். (இடையில் நான் 16 வருடம் வனவாசமாக தில்லி சென்றது தனிக்கதை).
மந்தைவெளி வீட்டுக்கு நாங்கள் எங்கள் ஊரிலிருந்து 1973ல் குடிவந்தபோது சென்னை மாநகரில் அவ்வளவாக வாகனங்கள் கிடையாது. எப்போதாவது ஒரு கார் செல்லும். பல்லவன் பேருந்து செல்லும். எப்போதாவது ஒரு ஆட்டோ, மற்றபடி கை ரிக்ஷா அல்லது ரிக்ஷா தான் அப்போது தென்படும். இன்றைக்கு எங்கு திரும்பினாலும் வாகனங்கள் வாகனங்கள் வாகனங்கள். மந்தைவெளியெங்கும் நான் காலாற நடந்திருக்கிறேன். என் கால்கள் படாத தெருவே கிடையாது. இன்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மைலாப்பூரில் காலாற நடப்பது பொழுதுபோக்காகிவிட்டது.
முன்பு நாங்கள் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகில் இருந்ததால் அங்கு எங்களைக் கவர்ந்த விஷயம் பங்குனி மாதம் நடைபெறும் அறுபத்து மூவர் திருவிழா தான். நினைவு தெரிந்த நாள் முதல் நாங்கள் வருடா வருடம் அறுபத்து மூவர் திருவிழாவைக் காணத் தவறியது இல்லை.
ஆனால் அறுபத்து மூவர் திருவிழாவிற்கு முன் தினம் நடைபெறும் தேரோட்டத்தை நான் 3 வருடங்கள் முன்புதான் பார்த்தேன்.
தெற்கு மாடவீதியில் உள்ள உறவினர் கடையில் எங்களுக்கு ராஜ உபசாரம் நடக்கும். அன்றைக்கு கடை அறுபத்து மூவர் திருவிழாவைக் காண மட்டும் திறப்பார்கள். கடை வாசலில் அடுக்கிவைக்கப்பட்டு இருக்கும் கதவுப் பலலைகளில் நின்று அங்கு குவியும் கூட்டத்தையும், கூட்டத்திற்கு நடுவே சிறு சப்பரங்களில் வரும் சிற்பங்களையும் காண்போம்.
அறுபத்து மூவர் திருவிழாவில் தான் கொட்டாங்குச்சி பிடில் (அப்படித்தான் சொல்வார்கள். ஆனால் மண்ணால் செய்யப்பட்டு இருக்கும்), மாட்டு வண்டி போல் இருக்கும் மேளம், வண்ணமயமான சுழல் காற்றாடிகள், புல்லாங்குழல் போன்றவை தென்படும். அம்மா எங்களுக்கு ஒரு புல்லாங்குழல் வாங்கிக்கொடுப்பார். அவர் வாங்கித்தராத பொருளுக்கு அழுது ஆர்ப்பாட்டம் செய்து அடிவாங்கி வந்த நாட்களும் உண்டு.
சற்று பெரிய பிள்ளைகள் ஆனதும் அம்மாவிடம் ஆளுக்கு 2 ரூபாய் வாங்கிக் கொண்டு மைலாப்பூர் குளத்தைச் சுற்றிலும் நடைபாதையில் கடைபோட்டிருப்பவர்களிடம் இருந்து விளையாட்டுப் பொருட்கள் வாங்குவோம்.
அந்த பொருட்கள் கொடுத்த மகிழ்ச்சியை இன்று எந்த பொருள் வாங்கினாலும் கொடுப்பதில்லை.
நானும் என் தம்பியும் வீதி உலா சென்று ஆளுக்கொரு பொருள் வாங்குவோம். அப்போது சிறு தின்பண்டங்கள் வாங்கித்தின்ற நினைவுகள் பசுமையாக உள்ளன. பாலாடைக்கட்டி, மரக்கிழங்கு ஒன்றை இலக்கு போல் சீவித்தருவார்கள். பத்து பைசாவுக்கு வாங்கினால் போதும். (தி.நகரில் அந்த கிழங்கை சமீபத்தில் பார்த்தேன். கொல்லிமலை கிழங்கு என்று விற்றார்கள். அன்றைக்கு 10 பைசாவுக்கு வாங்கியதை 10 ரூபாய் கொடுத்து வாங்கிசாப்பிட்டேன். சாக்கரின் போட்டு சுவையூட்டி சக்கை போன்று இருந்தது.இதையா சிறுவயதில் ஆசையாக வாங்கித் தின்றோம் என்று எண்ண வைத்தது)
பத்து பைசா, இருபத்தைந்து பைசாவுக்கு வாங்கும் பொருட்கள் மாதக்கணக்கில் வீட்டில் அனைவராலும் விளையாடப்படும். ஒரு முறை நானும் என் தம்பியும் ஒரு பிடில் வாங்கிவிட்டு அதை வீட்டுக்கு கொண்டு வர தைரியம் இல்லாமல் வழியில் யாரோ ஒரு சிறுவனிடம் கொடுத்துவிட்டு வந்ததும் வேடிக்கையான தருணங்கள். (அப்பாவுக்கு அவ்வளவு பயம்)
அறுபத்து மூவர் திருவிழாவிற்கு மட்டும் எங்கிருந்து தான் மக்கள் வருவார்களோ தெரியாது. லட்சக்கணக்கில் மக்கள் குவிவார்கள். மக்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த போலீசாரும் ஏராளமாக குவிக்கப்பட்டு இருப்பார்கள். மைலாப்பூர் வழியாக பேருந்து நிறுத்தப்பட்டு இருந்தாலும், லஸ் அல்லது மந்தைவெளி அல்லது சாந்தோம் வரை தான் பேருந்துகள் இயக்கப்படும். மக்கள் நீண்ட தூரத்தில் இருந்தெல்லாம் நடந்து வருவார்கள்.
அறுபத்து மூவர் திருவிழாவை முன்னிட்டு அப்போதெல்லாம் கடைகளில் மோர் வழங்குவார்கள். இதை வைத்து இந்த திருவிழாவிற்கு பெயர் அறுபத்துமோர் என்று சொல்லி சிரிப்பதும் இன்றும் நினைவில் உண்டு.இன்று மோர் மட்டும் அல்ல விதவிதமாக சாப்பாடு, கேசரி, ஐஸ்கிரீம் என்று ஏகப்பட்ட பொருட்களை வேண்டுதலாக வழங்குகிறார்கள்.
சிறு வயது முதற்கொண்டே நான் வேடிக்கையாக கவனித்த விஷயம் காணாமல் போகும் குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கும் சேவை தான். திருவிழாக் கூட்டத்தில் குழந்தைகள் காணாமல் போவதுண்டு. அப்படிக் காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளை ஒலிப்பெருக்கி வைத்து அறிவித்து பெற்றோரிடம் ஒப்படைப்பார்கள். அவர்கள் அறிவிப்பது வேடிக்கையாக இருக்கும். ” எங்களிடம் 2 வயது பையன் இருக்கிறான். மஞ்சள் சட்டையும், கருப்பு கால்சட்டையும் போட்டிருக்கிறான். அவனுக்கு அம்மா பெயர் சொல்லத் தெரியலை, அப்பா பெயர் சொல்லத் தெரியலை. குழந்தையை காணாமல் தேடும் தாய்மார் உடனே மேல மாடவீதியில் வந்து உங்கள் குழந்தையை கூட்டிட்டுப் போங்க” என்று கத்துவார்கள். குழந்தைக்கு தன் தாய் பெயரை சொல்லத் தெரிந்தால், அந்த பெயரைச் சொல்லி கூவிக்கூவி அழைப்பார்கள். இன்றைக்கும் அத்தகைய சேவைகள் இருந்தாலும், இரைச்சல் அதிகம், விளம்பரங்களும் செய்கிறார்கள்.
அறுபத்து மூன்று நாயன்மார்கள் தெற்கு மாடவீதியை கடந்ததும், கபாலீஸ்வரர் வருவதற்கு முன்போ பின்போ(சரியாக நினைவில் வைத்திருக்கவில்லை) வைரச்சாமி உற்சவர் அழைத்து வரப்படுவார் (வேறு ஒரு கோவிலில் இருந்து அழைத்து வரப்படுவார்) அந்த சாமிக்கு அந்த காலத்திலேயே கடும் பாதுகாப்பு இருக்கும். சாதாரண உடையில் ஏராளமான போலீசார் சுற்றி நிற்பார்கள். இந்த காலகட்டத்தில் ஒரு போலீசார், இன்றைக்கு நம் கம்ப்யூட்டர் யூ.பி.எஸ். அளிவில் ஒரு ஒயர்லெஸ் கருவியை காதோரம் வைத்து கேட்டுக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக தனியே நடந்து போவதை பல வருடங்கள் கண்டிருக்கிறேன். இன்று தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக அந்த ஒயர்லெஸ் கருவிக்கெல்லாம் வேலை இல்லாமல் போய்விட்டன.
அறுபத்து மூவர் திருவிழா என்றாலே இடி ராஜாக்கள் தொல்லையும் இருக்கும். அவ்வப்போது ஏதேனும் ஒரு இளைஞனை பெண்கள் நைய்யப் புடைவதும், பின்னர் போலீஸ் வந்த அவனை சட்டைக் காலரைப்பிடித்து இழுத்துச் செல்வதும் வழக்கமாக காணும் காட்சிகள்.
தில்லியில் நாங்கள் வசித்த காலத்தில் ஓரிருமுறை சென்னை வந்தபோது அறுபத்து மூவர் திருவிழாவைக்காண வாய்ப்பு கிடைத்த போதும், சென்னைக்கு மாற்றலாகி வந்த பின்னர் ஒரு வருடம் நீங்கலாக ஒவ்வொரு முறையும் அறுபத்து மூவர் திருவிழாவை என் குழந்தைகள் நாங்கள் கண்ட அதே ஆர்வத்துடன் காண்கின்றனர்.
பெரும்பாலானோருக்கு அறுபத்து மூவர் திருவிழா என்றால் கூட்டம் பார்க்கும் திருவிழா தான். 10 பைசாவுக்கு கிடைத்த பொருட்கள் இன்று 10 ரூபாய்க்கு விற்கின்றனர். தொலைவிலிருந்து அதே ஆர்வத்துடன் வரும் கூட்டத்தில் மட்டும் எந்த மாற்றத்தையும் காண முடிவதில்லை.








No comments:

Post a Comment