Saturday, November 4, 2017

அந்த மழைக்காலம்

எண்பதுகளின் தொடக்கத்தில் நாங்கள் மந்தைவெளியில் ராமகிருஷ்ண மடம் சாலையில் ராணி மெய்யம்மை பெண்கள் மேநிலைப்பள்ளியின் எதிரில் குடியிருந்தோம்.
எங்கள் தந்தையார் அங்கே வியாபாரம் செய்து வந்தார்கள். கடைக்கு பின்பகுதியில் எங்கள் வீடு.
ஈஸ்வரி ஸ்டோர்ஸ் என்றால் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அட்டைபெட்டிக்கடைக்கு பக்கத்தில் என்று அடையாளம் சொல்லும் அளவிற்கு பிரபலம்.
தாத்தா காலத்தில் பழைய பேப்பர் வியாபாரம் செய்து வந்த நிலையில் தம்பி தன் பிடிவாதத்தால் அட்டைபெட்டிக்கடையாக மாற்றினான்.
தம்பிக்கு அந்த காலகட்டத்திலேயே நல்ல செல்வாக்கு உண்டு.
கடைக்கு எதிரே சென்னை தொலைபேசிக்கு சொந்தமான காலியிடம். (இப்போது அங்கே இணைப்பகம் செயல்படுகிறது).
அடையாறில் இருந்து வரும் பேருந்துகள் எங்கள் கடைக்கு எதிரே இருந்த நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி ஏற்றிச்செல்லும்.
ஒரு சில பேருந்து ஓட்டுநர்கள் சிநேகமாக கையசைத்துச் செல்வார்கள்.
1980ல் நாங்கள் அங்கு குடியேறிய நேரம். மாருதி கார் வராத நேரம், பைக்குகளில் புல்லெட்டும் ராஜ்தூத்தும், ஸ்கூட்டரில் லேம்பிரட்டாவும், விஜய், பியாஜியோவும், மொபட்டில் ஹீரோ மெஜஸ்டிக்கும் தான் வாகனம். சைக்கிளும், டிரைசைக்கிளும் தள்ளுவண்டிகளும் சாதாரணமாக செல்லும். மந்தைவெளியில் இருந்து அடையாறு நோக்கிச் செல்லும் போது எங்கள் வீட்டுப்பகுதியில் மேட்டில் இருந்து இறக்கம் போல் சாலை சற்று சரிவாக இருக்கும். தள்ளுவண்டியில் செல்பவர்கள் இலகுவாக வண்டியை தள்ளிச் செல்வதை பார்த்து ரசிப்போம். கோலிசோடா ஏற்றிய தள்ளுவண்டியை திடகாத்திரமான நபர் மிகவும் அநாயசமாக இழுத்துச் செல்வார்.
மந்தைவெளியில் இருந்து அடையாறு நோக்கிய பாதையில் எங்கள் கடை தான் கடைசிக் கடை.
இரவு 7 மணிக்கு மேல் இருட்டும், சந்தடியற்ற சாலையும் நம்மை பயமுறுத்தும்.
மழைக்காலங்களில் பள்ளிக்கு விடுமுறை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பள்ளிக்கு விடுமுறை என்றால் எங்கள் கடையில் கூடுதல் நேரம் செலவழிப்பதும்தான் எங்கள் பணி. கடையில் அப்பாவிடம் கதை பேசுவதற்கும் எங்களுடன் பேசுவதற்கும் யாராவது வந்து கொண்டே இருப்பார்கள். அவர்களுடன் பேசுவது தான் பொழுது போக்கு.
மழைக்காலம் என்றால் எங்கள் கடையை சாரல் பெரிதும் சேதப்படுத்தும். பருவமழைக்காலங்களில் நாள் கணக்கில் கடையில் வியாபாரம் இருக்காது.
ஆள் நடமாட்டமே இல்லாமல் நாங்கள் வெட்டிக் கதை பேசி நேரம் கழிப்போம். காகிதக் கப்பல் செய்து பிளாட்பாரத்தை ஒட்டினார்போல ஓடும் மழைநீரில் விட்டு வேடிக்கை பார்ப்போம். யார் கப்பல் முதலில் மூழ்குகிறது என்பது தான் எங்கள் பொழுது போக்கு.
1982 அல்லது 83 ஆக இருக்கும். புயல் நேரம். கடையில் வியாபாரம் இல்லை. வீட்டுத் தேவைக்கு காய்கறி வாங்கக்கூட போக முடியாத அளவு மழை. காய்கறிக்கடைக்காரர்கள் கூட காய்கறி வாங்க
கொத்தவால் சாவடிக்கு சென்று இருப்பார்களா தெரியாது.
இயல்பு வாழ்க்கையே முடங்கிப் போய் இருந்த நேரம். அம்மா வந்து, அய்யா, ஏதாவது காய்கறி வாங்கி வந்தால் தான் இன்று சாப்பாடு என்றார். மழையோ பலத்த காற்றுடன் சீறிக் கொண்டிருந்தது.
கடைக்கு யாராவது வரமாட்டார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது சடசட வென்று மரம் முறிந்து விழும் சத்தம் கேட்டது. கடைக்கு எதிரே பிரமாண்டமாக வளர்ந்திருந்த காட்டு மரம்தான் முறிந்ததோ என்று பார்த்தோம். (தீக்குச்சி தயாரிக்க பயன்படுமாம். பூ செக்கச் செவேரென்று இருக்கும்)
ஆனால் பக்கத்து வீட்டில் இருந்த முருங்கை மரம் முறிந்து விழுந்தது.
நல்ல வேளை யாருக்கும் சேதம் இல்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் மிகவும் அன்பானவர்கள்.
அவர்கள் கை கொள்ளாத அளவு முருங்கைக் கீரையையும், கை நிறைய முருங்கைக் காயையும் கொடுத்துச் சென்றார்கள்.
அம்மாவும் சகோதரிகளும் முருங்கை இலையை ஆய்ந்து சமைத்தார்கள்.
பகல் ஒரு மணிக்கு சுடச்சுட முருங்கைக் கீரையும்,முருங்கைக்காய் கூட்டுடன் சோறும் சாப்பிட்ட அந்த நாளையும் மறக்க முடியாது. அந்த சுவையும் இன்னும் நாக்கில் இருக்கிறது. எத்தனை பெரிய ஓட்டல்களில் சாப்பிட்டாலும் அந்த நாள் சாப்பிட்ட அந்த முருங்கைக் கீரை சாப்பாட்டுக்கு ஈடில்லை.

No comments:

Post a Comment